எதிரணி எதுவாக இருந்தாலும் எங்களுடைய பாஸ்பால் ஆட்டமுறை தொடரும் - பென் ஸ்டோக்ஸ்!

Updated: Fri, Jun 16 2023 13:51 IST
Ben Stokes Vows No Let-Up In Attacking Approach During Ashes (Image Source: Google)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 

இந்நிலையில் நடப்பாண்டு ஆஷஸ் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி இன்று  பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்  நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் காயம் காரணமாக தொடர் முழுவதும் விளையாடவில்லை.

ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடினாலும் மிகப்பெரிய அளவில் பந்து வீசவில்லை. இதனால் ஆஷஸ் தொடரிலும் பந்து வீசுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தான் உடற்தகுதி பெற்றுவிட்டதாகவும், ஆஷஸ் தொடரில் பந்து வீசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸின் இந்த அறிவிப்பு இங்கிலாந்து அணிக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியா சிறப்பான டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி உள்ளது. அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிக்கு எதிராகவும் வெளிப்படும். இது மிகப்பெரிய சவால் என்பது எனக்குத் தெரியும். ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் இது மிகப்பெரியது என்பது தெரியும். பந்து வீசுவது, பேட்டிங் செய்வது மற்றும் பீல்டிங் செய்வது ஆகிய இந்த நோக்கத்தில்தான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். 

இந்தத் தொடர் அதிக நாட்கள் பிடிக்கும் என்பதால், வேறு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் அது அழுத்தத்தை கொடுத்துவிடும். நாங்கள் இதற்கு முன் எப்படி விளையாடினோமோ, அதே உத்வேகத்தில் விளையாட விரும்புகிறோம். ஒவ்வொரு தனிப்பட்ட வீரர்களும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். எதிரணி எதுவாக இருந்தாலும் எங்களுடைய பாஸ்பால் ஆட்டமுறை தொடரும்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை