புவியின் ஃபார்ம் கவலையளிக்கிறது - சுனில் கவாஸ்கர்!

Updated: Wed, Sep 21 2022 12:19 IST
Bhuvneshwar Kumar at death is a concern, says Sunil Gavaskar (Image Source: Google)

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 208 ரன்களை குவித்தும் கூட தோல்வியை தழுவியது. 209 ரன்கள் என்ற கடினமான இலக்கை அடிக்கவிடாமல் ஆஸ்திரேலியாவில் தடுக்கமுடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலும் இந்திய அணி சொதப்பியது. இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் இணைந்து 8 ஓவரில் 101 ரன்களை வாரி வழங்கினர். புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 52 ரன்களும், ஹர்ஷல் படேல் 4 ஓவரில் 49 ரன்களும் வழங்கிய நிலையில் இருவருமே விக்கெட் வீழ்த்தவில்லை.

அதிலும் 19ஆவது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் 16 ரன்களை வழங்கினார். அந்த ஓவரிலேயே கிட்டத்தட்ட போட்டி முடிந்துவிட்டது. இதையே தான் புவனேஷ்வர் குமார் தொடர்ச்சியாக செய்துவருகிறார். அது இந்திய அணிக்கு கவலையளிக்கிறது.

ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் 19ஆவது ஓவரில் அதிக ரன்களை வழங்கினார் புவனேஷ்வர் குமார். பாகிஸ்தானுக்கு எதிராக 19ஆவது ஓவரில் 19 ரன்களை வழங்கிய புவனேஷ்வர் குமார், இலங்கைக்கு எதிரான போட்டியில் 19ஆவது ஓவரில் 14 ரனக்ளை வழங்கி 2 போட்டிகளிலும் 19ஆவது ஓவரிலேயே எதிரணிகளின் வெற்றியை உறுதி செய்தார் புவனேஷ்வர் குமார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் அதேதான் நடந்தது.

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முக்கியமான பந்துவீச்சாளராக புவனேஷ்வர் குமார் பார்க்கப்படும் நிலையில், டெத் ஓவர்களில் அவரது தொடர்ச்சியான மோசமான பவுலிங் இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், “மொஹாலியில் பனியெல்லாம் கிடையாது. எனவே அதை காரணமாக சொல்லமுடியாது. இந்திய பவுலர்கள் சரியாக பந்துவீசவில்லை. 19வது ஓவர் தான் இந்திய அணிக்கு தொடர்ந்து பெரிய பிரச்னையாக இருந்துவருகிறது. புவனேஷ்வர் குமார் ஒவ்வொரு முறையும் 19வது ஓவரில் தொடர்ச்சியாக ரன்களை வாரி வழங்குகிறார். 

அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், புவனேஷ்வர் குமார் கடைசியாக 3முறை வீசிய 19வது ஓவரில் மொத்தம் 18 பந்தில் 49 ரன்களை வழங்கியிருக்கிறார். ஒரு பந்துக்கு 3 ரன் வீதம் வழங்கியிருக்கிறார். அவரது அனுபவத்திற்கு இது மிக அதிகம். இதுதான் இந்திய அணியின் பெரிய பிரச்னையாக இருக்கிறது” என்று கருத்து கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை