மகளிர் ஆசிய கோப்பை: இலங்கை வீழ்த்தி ஏழாவது முறையாக பட்டத்தை வென்றது இந்தியா!

Updated: Sat, Oct 15 2022 15:46 IST
Bowlers; Mandhana Shine As India Beat Sri Lanka By 8 Wickets To Lift Their 7th Women's Asia Cup 2022 (Image Source: Google)

வங்கதேசத்தில் நடைபெற்று வந்த 8ஆவது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன. 

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார்.

இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.=

அதன்படி விளையாடிய இந்திய மகளிர் அணி பெரிய சிரமம் இல்லாமல் 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையும், துணைக் கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 7ஆவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை