ஹசரங்கா அணியில் இல்லாதது பின்னடைவாக உள்ளது - மஹீஷ் தீக்ஷனா!
காயம் காரணமாக இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான வனிந்து ஹசரங்கா இந்தியாவில் நடைறும் உலகக் கோப்பைத் தொடரிலிந்து விலகினார். ஒருநாள் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா மற்றும் மஹீஸ் தீக்ஷனா இணை பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு எதிரணிக்கு சவால் அளிக்கக் கூடியவர்கள்.
காயம் காரணமாக ஹசரங்கா அணியில் இல்லாத நிலையில், மஹீஸ் தீக்ஷனாவின் பந்துவீசும் பணி கூடுதல் சவால் நிறைந்ததாக உள்ளது. இதன்காரணமாக இலங்கை அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து படுதோல்வியைச் சந்தித்து தற்போது அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் ஏறத்தாழ இழந்தவிட்டது.
இந்த நிலையில், வனிந்து ஹசரங்கா இலங்கை அணியில் இல்லாதது தனது பந்துவீச்சை சவாலானதாக மாற்றியுள்ளதாக அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் மஹீஸ் தீக்ஷனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஹசரங்கா அணியில் இல்லாதது பின்னடைவாக உள்ளது. விக்கெட்டுகளை எடுக்கும் மிக முக்கியப் பந்துவீச்சாளர் அவர்.
நாங்கள் இருவரும் எங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணிக்கு அழுத்தம் கொடுப்போம். சில நாள்களில் அவர் விக்கெட் எடுப்பார். சில நாள்களில் நான் விக்கெட் எடுப்பேன். எங்களது அணி தற்போது ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கும் அணியாக உள்ளது. இதனை சவாலாகவும், எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாகவும் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.