நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - குசால் பெரேரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மெண்டிஸ் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்து அதிரடியாக விளையாடிய சரித் அசலங்கா 2 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் தனஞ்செய டி சில்வா, தசுன் ஷனகா ஆகியோரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் பெரேரா 53 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டிம் செய்ஃபெர்ட் ரன்கள் ஏதுமின்றியும், சாத் பௌஸ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த டாம் லேதம் - டெரில் மிட்செல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் டாம் லேதம் 27 ரன்களில் ஆட்டமிழக்க, டெரில் மிட்செல் அரைசதம் கடந்த கையோடு 66 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஜேம்ஸ் நீஷம் 19 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் கடைசி பந்தில் நியூசிலாந்து வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இஷ் சோதி சிக்சர் அடித்தார். இதன்மூலம் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. 

இதையடுத்து சூப்பர் ஓவரில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் சிறப்பாக பந்துவீச்சிய மஹீஷ் தீக்‌ஷனா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு சரித் அசலங்கா அடுத்தடுத்து சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி வெற்றியைத் தேடித்தந்தார்.

Advertisement

இதன்மூலம் இலங்கை அணி சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது, 1-0 என்ற கணக்கில் டி20 கிரிக்கெட் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News