டெவான் கான்வேவிற்கு எலும்பு முறிவு; ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்!

Updated: Fri, Feb 23 2024 19:33 IST
டெவான் கான்வேவிற்கு எலும்பு முறிவு; ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்! (Image Source: Google)

நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 174 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பருமான டெவான் கான்வே காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். மேலும் நியூசிலாந்து அணி இலக்கை துரத்திய போதும் அவர் விளையாட வரவில்லை. இந்நிலையில் டெவான் கான்வேவின் காயம் குறித்த அப்டெட் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அதன்படி, டெவான் கான்வேவுக்கு மேற்கொள்ளபட்ட எக்ஸ்ரே முடிவுகளின் படி அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் அவரால் அடுத்த போட்டியில் விளையாட முடியுமா என்பது மருத்துவ சோதனைக்கு பிறகே தெரியவரும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாவது டி20 போட்டியில் டெவான் கான்வே இடம்பெறுவது கேள்விக்குறியாக மாறியுள்ளது. 

முன்னதாக முதல் டி20 போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திராவும் தனது விரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் டெவான் கான்வேவும் காயத்தை சந்தித்துள்ளது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் வரவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர். 

மேலும் இத்தொடர் தொடங்குவதற்கு ஒருமாத காலமே உள்ள நிலையில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் காயத்தை சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பெரும் பின்னடவைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர்கள் கூடிய விரைவில் குணமடையும் பட்சத்தில் நிச்சயம் ஐபிஎல் தொடரிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை