சிபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய டி காக்; கயானாவை வீழ்த்தியது பார்படாஸ்!

Updated: Sun, Sep 15 2024 12:29 IST
Image Source: Google

12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் - கயானா அமேசன் வரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணி தரப்பில் குயின்டன் டி காக் - கலீம் அலீன் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

அதேசமயம் அவருக்கு துணையாக விளையாடிய கலீம் அலீன் 22 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அலிக் அதானாஸ் 16 ரன்களுக்கும், கேப்டன் ரோவ்மன் பாவெல் 7 ரன்களுக்கும், டேவிட் மில்லர் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த குயின்டன் டி காக் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டி காக் 8 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 115 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்தது. கயானா அணி தரப்பில் ரெய்மன் ரெய்ஃபெர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கயானா அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் அசாம் கான், டிம் ராபின்சன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் இணைந்த கேப்டன் ஷாய் ஹோப் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஷிம்ரான் ஹெட்மையர் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாய் ஹோப்பும் 40 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த மொயீன் அலி - கீமோ பால் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அபாரமாக விளையாடி வந்த மொயீன் அலியும் 39 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கீமோ பால் 30 ரன்களையும், ரெய்மன் ரெய்ஃபெர் 16 ரன்களை சேர்த்த நிலையிலும், கயானா அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை மட்டுமே சேர்த்தது. ராயல்ஸ் அணி தரப்பில் கேசவ் மஹாராஜ் 3 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 32 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை