இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும், அர்ஷ்தீப் சிறப்பாக பந்துவீசினார் - ஷிகர் தவான்! 

Updated: Tue, May 09 2023 14:40 IST
Credit to Arshdeep Singh for taking game to last ball, says captain Shikhar Dhawan (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக கேப்டன் ஷிகர் தவான் 57 ரன்களையும், ஷாருக்கான் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் தலா 21 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக நிதீஷ் ராணா 51 ரன்களையும், ஆண்ட்ரே ரசல் 42 ரன்களையும் எடுத்து அசத்தினர். 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான், “உண்மையிலேயே இந்த போட்டியில் தோல்வி அடைந்தது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அதோடு இந்த போட்டியை நாங்கள் இழந்ததை நினைத்தால் கஷ்டமாகவும் இருக்கிறது.இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிது கிடையாது. எனவே நாங்கள் அடித்த ரன்கள் வெற்றிக்கு போதுமானது என்று நினைத்தோம். 

ஆனால் இறுதியில் கொல்கத்தா அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுவிட்டது. இந்த போட்டியின் கடைசி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பாகவே வீசினார். கடைசி போட்டியில் இருந்து அவர் மீண்டு வந்து இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அடைய வைக்கிறது. அதோடு இந்த போட்டியில் கடைசி பந்து வரை ஆட்டத்தை கொண்டு சென்ற பெருமை அவரைத் தான் சேரும். அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் மிக அற்புதமாக பந்துவீசியிருந்தார்” என பாராட்டியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை