ஐபிஎல் 2022: வெற்றி குறித்து பேசிய எம் எஸ் தோனி!

Updated: Mon, May 02 2022 11:57 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 46ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 99 ரன்களும், கான்வே 85* ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன் (47) மற்றும் அபிசேக் சர்மா (39) ஆகியோர் சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், கடைசி நேரத்தில் காட்டடி அடித்த நிக்கோலஸ் பூரணின் (64 ரன்கள்) அதிரடி ஆட்டத்தாலும், ஹைதராபாத் அணி வெற்றிக்கு மிக அருகில் வந்தாலும், மிடில் ஓவர்களில் சொதப்பிய ஒரே காரணத்தால் ஹைதராபாத் அணி இந்த போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றிருப்பதே சென்னை அணியின் இந்த வெற்றிக்கு காரணம் என பலரும் பேசி வரும் நிலையில், கேப்டன் மாறிவிட்டால் அனைத்தும் அப்படியே மாறிவிடாது என தோனி அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தோனி பேசுகையில், “பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போதுமான இலக்கை நிர்ணயித்துவிட்டோம். நான் இந்த போட்டியும் புதிதாக எந்த மாற்றமும் செய்யவில்லை, கேப்டன் மாறிவிட்டால் அனைத்தும் மாறிவிடும் என்றிலை. பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அதிகமான ரன் குவித்ததும், 7-14 ஓவர்களை எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக கையாண்டதுமே இந்த வெற்றிக்கான முக்கிய காரணமாக பார்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை