சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானை 241 ரன்களில் சுருட்டியது இந்தியா!

Updated: Sun, Feb 23 2025 18:26 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின. 

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பாபர் ஆசாம் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களைச் சேர்த்திருந்த பாபர் ஆசாம் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக்கும் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த சௌத் ஷகீல் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் அடித்து அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் சிறப்பான ஆஅட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேற்கொண்டு இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அரைசதத்தை நெருங்கிய முகமது ரிஸ்வான் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த சௌத் ஷகீலும் 62 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய தயாப் தாஹீர் 4 ரன்களிலும், அதிரடியாக விளையாட முயற்சித்த சல்மான் ஆகா 19 ரன்னிலும், ஷாஹீன் அஃப்ரிடி முதல் பந்திலேயும், நஷீம் ஷா 14 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹாரிஸ் ராவுஃப் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட கையோடு 8 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Also Read: Funding To Save Test Cricket

இறுதியில் 38 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் குஷ்தில் ஷாவும் தனது விக்கெட்டை இழக்க, பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை