சாம்பியன்ஸ் கோப்பை 2025: தாவ்ஹித் ஹ்ரிடோய் அபார சதம; இந்திய அணிக்கு 229 ரன்கள் இலக்கு!

Updated: Thu, Feb 20 2025 18:13 IST
Image Source: Google

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேச மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் அனுபவ தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் அடுத்த ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் தன்ஸித் ஹசன் - மெஹிதி ஹசன் இணை ஓரளவு தாக்கு பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் இவர்களின் பார்ட்னர்ஷிப்பும் நீடிக்கவில்லை. 

இதில் 5 ரன்கள் எடுத்த நிலையில் மெஹிதி ஹசன் மிராஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களைச் சேர்த்த தன்ஸித் ஹசனும், அதன்பின் களமிறங்கிய அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து அக்ஸர் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 35 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜக்கர் அலியும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரோஹித் சர்மா தவறவிட்டதன் காரணமாக் அக்ஸர் படேலின் ஹாட்ரிக் விக்கெட் கனவும் தகர்ந்தது. 

அதன்பின் ஜக்கர் அலி மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை அபாரமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இவர்கள் இருவரும் இணைந்து தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை அடித்ததுடன் தங்களின் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து வங்கதேச அணியை நல்ல நிலைக்கு கொண்டுச் சென்றனர். அதன்பின் அருமையாக விளையாடி வந்த ஜக்கர் அலி 4 பவுண்டரிகளுடன் 64 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷாத் ஹொசைன் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 18 ரன்களிலும், தன்ஸிம் ஹசன் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய தாவ்ஹித் ஹிரிடோய் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் வங்கதேச அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை