பயிற்சி ஆட்டம்: இலங்கையை 263 ரன்களில் சுருட்டிய வங்கதேசம்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் கௌகாத்தியில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் 34 ரன்கள் எடுத்த நிலையில் குசால் பெரேரா ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸும் 22 ரன்களுக்கும், சதீரா சமரவிக்ரமா 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த பதும் நிஷங்கா, 8 பவுண்டரி ஒரு சிக்சர் என 68 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் சரித் அசலங்கா 18 ரன்களுக்கு, கேப்டன் தசுன் ஷனகா 3 ரன்களுக்கும், திமுத் கருணரத்னே 18 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
மறுப்பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த தனஞ்செயா டி சில்வா 55 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய துனித் வெல்லாலகே, துஷன் ஹெமந்தா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் மஹெதி ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.