CWC 2023 Qualifiers: ஓமனை பந்தாடிய இலங்கை; ஹசரங்கா அபாரம்!
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஓமன் அணிக்கு தொடக்கம் முதலே பேட்டர்கள் சரிவர் செயல்படாததால் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தன. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கஷ்யப் ஒரு ரன்னிலும், ஜதிந்தர் சிங் 21 ரன்களிலும், அகிப் இலியாஸ், 6 ரன்களுக்கும், முகமது நதீம் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் வந்த அயான் கான் ஓரளவு ரன்களைச் சேர்த்தந் நிலையில் 41 ரன்களுக்கு அவரும் விக்கெட்டை இழக்க பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தர். இதனால் 30.2 ஓவர்களில் ஓமன் அணி 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய வநிந்து ஹசரங்கா 5 விக்கெட்டுகளையும், லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 99 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிஷங்கா - திமுத் கருணரனே இணை அதிரடியாக தொடங்கினர். இதில் அபாரமாக செயல்பட்ட கருணரத்னே அரைசதம் கடந்ததுடன் அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். இதன்மூலம் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 15 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.