காமன்வெல்த் 2022: இங்கிலாந்தை வீழ்த்தி பதக்கத்தை உறுதிசெய்த இந்திய மகளிர் அணி!

Updated: Sat, Aug 06 2022 18:50 IST
CWG 2022: India are into the CWG 2022 final! (Image Source: Google)

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளின் நடப்பாண்டு சீசன் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்ம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 24 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது.  இம்முறை மகளிர் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

அதன்படி இன்று நடைபெறும் அறையிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 15 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ஸ்மிருதி மந்தனா 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 

அவருடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸும் பவுண்டரிகளைப் பறக்கா விட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 61 ரன்கள் எடுத்திருந்த ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 20 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. இங்கிலான்ந்து அணி தரப்பில் ஃப்ரெயா கேப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சோபிய டான்க்லி - டேனியல் வையட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து ஸ்கோரை உயர்த்தினர். இதில் டான்க்லி 19 ரன்களிலும், டேனியல் வையட் 35 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

அதைத்தொடர்ந்து களமிரங்கிய  ஆலிஸ் கேப்ஸியும் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த நடாலி ஸ்கைவர் - எமி ஜோன்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின்னர் 31 ரன்களில் எமி ஜோன்ஸ் ஆட்டமிழக்க, முறுமுனயில் வெற்றிக்காக போராடிய நடாலி ஸ்கைவர் 41 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். பின் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

இந்திய அணி தரப்பில் கடைசி ஓவரை வீசுய ஸ்நே ராணா ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன், 9 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதன்மூலம்ம் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தியது. 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022-ன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதிசெய்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை