ரஞ்சி கோப்பை 2025: டேனிஷ் மாலேவார், கருண் நாயர் அபாரம்; வலிமையான நிலையில் விதர்பா!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப்போட்டிக்கு விதர்பா மற்றும் கேரளா அணிகள் முன்னேறின.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி இன்று (பிப்ரவரி 26) நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய விதர்பா அணிக்கு பார்த் ரேகாடே - துருவ் ஷோரே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பார்த் ரேகாடே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தர்ஷன் நல்கண்டோவும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து துருவ் ஷோரேவும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் விதர்பா அணி 24 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த டேனிஷ் மாலேவார் - கருண் நாயர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். அதன்பின் இருவரும் அபாரமாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனிஷ் மாலேவார் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அவருடன் இணைந்து விளையாடி வந்த கருண் நாயரும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
இதன்மூலம் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் இப்போட்டியில் சதமடிப்பார் எனா எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 86 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய யாஷ் தாக்கூர் ஒருபக்கம் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்த, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டேனிஷ் மாலேவார் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் விதர்பா அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 254 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டேனிஷ் மாலேவார் 14 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 138 ரன்களுடனும், யாஷ் தாக்கூர் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கேரளா அணி தரப்பில் நித்தீஷ் 2 விக்கெட்டுகளையும், ஈடன் ஆப்பிள் டாம் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.