வெற்றிகரமான உலகக் கோப்பைக்கு கேப்டன் ஷனகாவை நான் ஆதரிக்கிறேன் - லசித் மலிங்கா!

Updated: Wed, Sep 20 2023 20:12 IST
வெற்றிகரமான உலகக் கோப்பைக்கு கேப்டன் ஷனகாவை நான் ஆதரிக்கிறேன் - லசித் மலிங்கா! (Image Source: Google)

ஒரு காலத்தில் ஆசியாவில் இந்திய அணியைத் தாண்டி ஆதிக்கம் செலுத்திய அணியாக இலங்கை இருந்தது. இதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியா ஆசிய கோப்பை தொடரை எட்டு முறை வென்று இருக்க, இலங்கை ஆறு முறை வென்று இருப்பதே அதற்கு சாட்சி. மேலும் உலக கிரிக்கெட்டுக்குள் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதற்கு பிறகு, வெகு வேகமாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை அர்ஜுன ரணதுங்கா தலைமையில் 1996 ஆம் ஆண்டு இலங்கை கைப்பற்றி அசத்தியது.

அங்கிருந்து இலங்கை உலக கிரிக்கெட்டில் ஒரு புது பிராண்டை அறிமுகப்படுத்தி விளையாடியது. ஒருநாள் கிரிக்கெட்டில் பவர் பிளேவை எப்படி பயன்படுத்துவது என்று சரத் ஜெயசூர்யாவை வைத்து இலங்கை காட்டியது. இன்னொரு பக்கத்தில் உலகச் சாதனை வீரரான முத்தையா முரளிதரன் பந்துவீச்சுத் துறையில் இருந்தார். கூடவே சமிந்தா வாஸ் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் இலங்கை அணி யாருக்கும் பெரிய அச்சுறுத்தலான அணி.

இதற்கு அடுத்து ஜெயவர்த்தனே காலத்தில் குமார் சங்கக்கரா எனும் லெஜன்ட் பேட்ஸ்மேன் கிடைத்தால், இந்த அணியுடன் இறுதியாக லஷீத் மலிங்கா வந்து சேர்ந்தார். அங்கிருந்து இலங்கை தனது இரண்டாவது வலிமையான அணியோடு பயணிக்க ஆரம்பித்தது. இப்படி இருந்த இலங்கை கிரிக்கெட்டில் திடீரென நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் ஓய்வு பெற்று நகர, இலங்கை கிரிக்கெட் வெகு வேகமாக வீழ்ச்சி அடைந்தது. அவர்களால் உள்நாட்டில் கூட தொடர்களை தக்க வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.

இந்த நிலைமையில் மிக்கி ஆர்தர் பயிற்சியின் கீழ் கட்டமைக்கப்பட்ட அணிக்குள் வந்த தசுன் ஷனகா கேப்டனாக பொறுப்பேற்றார். பின்பு சில்வர் வுட் பயிற்சியில் அவரது கேப்டன்சி மிக சிறப்பாக அமைந்தது. கடந்த வருடம் ஆசியக் கோப்பை தொடரை வென்றது, உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெள்ளை பந்து தொடரை வென்றது என அவரது கேப்டன்சி சாதனைகள் மிக நன்றாக இருக்கிறது.

அதே சமயத்தில் ஒரு பேட்ஸ்மேனாக அவர் தோல்வி அடைந்திருக்கிறார். மேலும் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் அவருடைய அணி வெறும் 50 ரன்கள் ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. இதன் காரணமாக உலக கோப்பைக்கு அவரது கேப்டன்சி பறிக்கப்படுவதோடு, அணியில் இருந்து கூட அவரை நீக்கலாம் என்று தகவல்கள் வந்தது. ஆனால் அதன்பின் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியை தசுன் ஷனகா வழிநடத்துவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.  

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள லசித் மலிங்கா “இலங்கை கிரிக்கெட் மற்றும் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கடினமான காலகட்டத்தில் கேப்டன் பொறுப்பை ஷனகா ஏற்றுக்கொண்டார். அமைதியான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையால் தேசியத் தரப்பில் நிலைத்தன்மை மற்றும் மரியாதையை அவரால் கொண்டுவர முடிந்தது. 

ஆசியக் கோப்பை உட்பட சிறப்பான கேப்டன்சி சாதனை உடன், எதிரணிகளைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வென்று இருந்த காரணத்தினால், நான் உட்பட அனைவரும் அவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்த்தோம்.

முக்கியமான போட்டிகள் இருக்கின்ற காரணத்தினால் கேப்டன் மாற்றம் உதவாது என்பதை, முடிவெடுக்கும் முன் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். வெற்றிகரமான உலகக் கோப்பைக்கு கேப்டன் ஷனகா மற்றும் அவருடைய அணியை நான் ஆதரிக்கிறேன்” என்றுதெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை