விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் 4 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. மான்செஸ்டரில் கடந்த 10ஆம் தேதி தொடங்க இருந்த 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கரோனா அச்சம் காரணமாக இந்திய வீரர்கள் களமிறங்க மறுத்ததால் அந்த போட்டி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.

Advertisement

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது கரோனா பாதிப்பை சந்தித்ததாலும், அடுத்து உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மரும் கரோனா தொற்றுக்கு ஆளானதாலும் கலக்கம் அடைந்த இந்திய அணியினர் களம் இறங்க மறுத்ததால் விறுவிறுப்பான இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவுக்கு வராமல் போனது.

Advertisement

4ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக லண்டனில் உள்ள ஓட்டலில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ரவிசாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணியினர், கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் கலந்து கொண்டனர். அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பங்கேற்ற இந்த விழாவில் கலந்து கொண்டதன் விளைவாக தான் ரவிசாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணியின் பயிற்சியாளர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணியினர் யாரும் முககவசம் அணியாமல் கலந்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. 

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் திலிப் தோஷி கூறுகையில், ‘ஓட்டல் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் நான் லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். அதில் நிறைய பிரபலங்கள் மற்றும் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்திய வீரர்கள் உள்பட யாரும் முககவசம் அணியாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். 

இந்திய வீரர்கள் 10 நிமிடத்திற்குள் அங்கிருந்து கிளம்பி விட்டனர். இங்கிலாந்தை பொறுத்தமட்டில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தி விட்டதால் அவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருக்கிறது. இதனால் அங்கு அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் திரள்கிறார்கள்.

Advertisement

இருப்பினும் வீரர்கள் செல்லும் இடங்களில் மக்கள் கொஞ்சம் அதிகமாக கூடுவார்கள் என்பதால், இந்திய அணியினர் முககவசம் அணிந்து இருக்கலாம். நான் அணியில் இடம் பெற்று இருந்தால் நிச்சயம் சொந்த பாதுகாப்பு கருதி முககவசம் அணிந்து இருப்பேன்.

5ஆவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக வர்ணணையாளரும், வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரருமான மைக்கேல் ஹோல்டிங்கிடம் நான் பேசினேன். அப்போது அவர், ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு போதிய கால அவகாசம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. ஏற்கனவே 4ஆவது டெஸ்டுடன் தொடரை முடித்து கொள்ள வலியுறுத்தி இருந்தனர் என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார்’ என்று தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News