ஐஎல்டி20 2025: சதத்தை தவறவிட்ட வார்னர்; துபாய் கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் அபிதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷாய் ஹோப் மற்றும் டேவிட் வார்னர் இணை சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு இருவரும் இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாய் ஹோப் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குல்பதின் நைபும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடிய டேவிட் வார்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் குல்பதின் நைப் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரொவ்மன் பாவெலும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழக்க, இறுதியில் அபாரமாக விளையாடிய தசுன் ஷனகா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வார்னர் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 93 ரன்களைச் சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் மற்றும் ஆண்ட்ரிஸ் கஸ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கைல் மேயர்ஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜோ கிளார்க் 29 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதனைத்தொடர்ந்து மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய ஆண்ட்ரிஸ் கஸும் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 78 ரன்களைச் சேர்த்து கையோடு ஆட்டமிழந்தார். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டேவிட் வில்லியும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் 16 ரன்களையும், கேப்டன் சுனில் நரைன் 22 ரன்களையும் சேர்த்த நிலையிலும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் துஷ்மந்தா சமீரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.