துலீப் கோப்பை 2024: அபிமன்யூ ஈஸ்வரன் சதம்; தடுமாற்றத்தில் இந்தியா பி அணி!

Updated: Sat, Sep 14 2024 21:47 IST
Image Source: Google

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்ச நடத்தி வருகின்றன. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா சி அணியில் இஷான் கிஷான் சதமடித்தும், பாபா இந்திரஜித், மனவ் சுதர் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் அரைசதமும் கடந்து அசத்த இன்னிங்ஸ் முடிவில் 525 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 111 ரன்களையும், மனவ் சுதர் 82 ரன்களையும் சேர்த்தனர். 

இந்தியா சி அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்தியா பி அணிக்கு கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் - நாராயன் ஜெகதீசன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன்மூலம் இந்தியா பி அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் ஏதும் இழப்பின்றி 124 ரன்களைக் குவித்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை அபிமன்யூ ஈஸ்வரன் 51 ரன்களுடனும், நாராயண் ஜெகதீசன் 67 ரன்களுடனும் இன்னிங்ஸை தொடர்ந்தனர். 

இதில் சதமடிப்பார் என எதிரபர்க்கப்பட்ட ஜெகதீசன் 70 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய முஷீர் கான் ஒரு ரன்னிலும், சஃப்ராஸ் கான் 16 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், நிதீஷ் ரெட்டி 2 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும், சாய் கிஷோர் 21 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் இந்தியா பி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையிலும், மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த அபிமன்யூ ஈஸ்வரன் சதமடித்து அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

இதன் காரணமாக இந்தியா பி அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள அபிமன்யூ ஈஸ்வரன் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 143 ரன்களைச் சேர்த்துள்ள நிலையில், அவருக்கு துணையாக விளையாடி வரும் ராகுல் சஹார் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா சி அணி தரப்பில் அபாரமான பந்துவிச்சை வெளிப்படுத்திய அன்ஷுல் காம்போஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 216 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா பி அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை