துலீப் கோப்பை 2024: டிராவில் முடிந்தது இந்தியா பி - இந்தியா சி ஆட்டம்!

Updated: Sun, Sep 15 2024 21:33 IST
Image Source: Google

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்ச நடத்தி வருகின்றன. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா சி அணியில் இஷான் கிஷான் சதமடித்தும், பாபா இந்திரஜித், மனவ் சுதர் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் அரைசதமும் கடந்து அசத்த இன்னிங்ஸ் முடிவில் 525 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 111 ரன்களையும், மனவ் சுதர் 82 ரன்களையும் சேர்த்தனர். 

இந்தியா சி அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்தியா பி அணிக்கு கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் - நாராயன் ஜெகதீசன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.  பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிரபர்க்கப்பட்ட ஜெகதீசன் 70 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய முஷீர் கான் ஒரு ரன்னிலும், சஃப்ராஸ் கான் 16 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், நிதீஷ் ரெட்டி 2 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும், சாய் கிஷோர் 21 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதனால் இந்தியா பி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையிலும், மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த அபிமன்யூ ஈஸ்வரன் சதமடித்து அசத்தினார்.  இதன் காரணமாக இந்தியா பி அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தை அபிமன்யூ ஈஸ்வரன் 143 ரன்களுடனும், ராகுல் சஹார் 18 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ராகுல் சஹார் மேற்கொண்டு ரன்களைச் சேர்க்காமல் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த நவ்தீப் சைனி, முகேஷ் குமார் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபிமன்யூ ஈஸ்வரன் 157 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். இதனால் இந்தியா பி அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா சி அணியில் சாய் சுதர்ஷன் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களிலும், ராஜத் பட்டிதார் 42 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய இஷான் கிஷனும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் இந்தியா சி அணி இரண்டாவது இனிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதன்பின் இந்திய டி  அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க போதிய நேரம் இல்லாத காரணத்தால் இப்போட்டியானது அத்துடன் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டதுடன், இப்போட்டியானது டிராவில் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அன்ஷுல் காம்போஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை