ஐபிஎல் 2022: இங்கிலாந்து வீரர்களுக்கு புதிய சிக்கல்!

Updated: Fri, Jan 28 2022 17:49 IST
ECB To Call English Players From IPL Midway Due To Series Against New Zealand (Image Source: Google)

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது. 2018-க்குப் பிறகு நடைபெறும் மெகா ஏலம் என்பதால் இந்த வருட ஏலம் இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.  ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள், போட்டியின் கடைசிக்கட்டத்தில் விளையாட சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணி ஜூன் மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜூன் 2 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர்கள், ஐபிஎல் முழுக்க விளையாடினால் அவர்களால் லார்ட்ஸ் டெஸ்டில் பங்கேற்பது சிரமம் என அறியப்படுகிறது. ஜோ ரூட், ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை எனச் சொல்லிவிட்டார்கள். ஜாஸ் பட்லரை ராஜஸ்தான் அணி தக்கவைத்துள்ளது. மார்க் வுட், ஜானி பேர்ஸ்டோ உள்ளிட்ட 22 இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள். 

மார்க் வுட், ஜானி பேர்ஸ்டோ தவிர டேவிட் மலான், போப், கிரைக் ஓவர்டன், சாம் பில்லிங்ஸ், லாரன்ஸ் போன்ற வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பெறக் கூடியவர்கள் என்பதால் நிலைமை சிக்கலாகியுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் அணி வீரர்கள், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு ஒரு முதல்தர ஆட்டத்திலாவது விளையாட வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. 

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்களால் எப்படி ஐபிஎல் முடியும் வரை விளையாட முடியும்? இக்காரணங்களில் மே கடைசியில் முடியும் ஐபிஎல் போட்டியில் மே 15 அல்லது மே 20க்குப் பிறகு  இங்கிலாந்து வீரர்களால் விளையாட முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 

இதனால் இங்கிலாந்து டெஸ்ட் வீரர்களைத் தேர்வு செய்யும் ஐபிஎல் அணிகள் இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டு ஏலத்தில் முடிவெடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை