Emerging Asia Cup 2024: இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஃப்கானிஸ்தான்!

Updated: Sun, Oct 27 2024 22:07 IST
Image Source: Google

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடந்து முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை ஏ மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் ஏ அணியை பந்துவீச அழைத்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு யசோதா லங்கா - லஹிரு உதாரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யசோதா லங்கா ஒரு ரன்னிலும், லஹிரு உதாரா 5 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நுவநிது ஃபெர்னாடோ, அஹான் விக்கிரமசிங்க ஆகியோரும் சொற்ப ரன்களில் நடைடைக் கட்டினர். 

இதனால் இலங்கை அணி 15 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த பவன் ரத்னாயகே மற்றும் சஹான் ஆராச்சிகே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பவன் ரதனாயகே 20 ரன்களிலும், அடுத்து வந்த நிமேஷ் விமுக்தி 23 ரன்களிலும், ரமேஷ் மெண்டிஸ் முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஹான் ஆராச்சிகே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

தொடர்ந்து இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த சஹான் ஆராச்சிக்கே 6 பவுண்டரிகளுடன் 64 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய துஷன் ஹெமந்தா 6 ரன்களையும் சேர்த்தூ அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை ஏ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் ஏ அணி தரப்பில் பிலால் சமி 3 விக்கெட்டுகளையும், அல்லா கஸான்ஃபர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தன் அணிக்கு முதல் பந்தே அதிர்ச்சி காத்திருந்தது. 

அந்த அணியின் ஆதிரடி தொடக்க வீரர் ஸுபைத் அக்பரி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து செதிகுல்லா அடலுடன் இணைந்த கேப்டன் தர்விஷ் ரசூலி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கேப்டன் தர்விஷ் ரசூலி 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து காளமிறங்கிய கரிம் ஜனத்தும் வழக்கம் போல் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கரீம் ஜனத் 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த செதிகுல்லா அடல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 55 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் ஏ அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக ஆஃப்கானிஸ்தான் ஏ அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை