Emerging Asia Cup 2024: ஆயுஷ் பதோனி அதிரடி அரைசதம்; ஓமனை பந்தாடியது இந்தியா!

Updated: Wed, Oct 23 2024 21:59 IST
Image Source: Google

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஓமன் அணிக்கு கேப்டன் ஜதிந்தர் சிங் - அமீர் கலீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அமீர் கலீம் 2 சிக்ஸர்களுடன் 13 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கரண் சொனாவலே ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜதிந்தர் சிங்குடன் இணைந்த வசிம் அலியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயரத்தொடங்கியது. 

அதன்பின் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜதிந்தர் சிங் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பாவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் ஓமன் அணி 80 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது நதீம் மற்றும் ஹமத் மிர்ஸா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடியதுடன் 5ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது நதீம் 41 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹமத் மிர்ஸா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஆகிப் கான், ரஷித் தார் சலாம், நிஷாந்த் சிந்து, ரமந்தீப் சிங் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் அனுஜ் ராவத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அனுஜ் ராவத் 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.பின்னர் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து கேப்டன் திலக் வர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 5 பவுண்டரி, ஒரு சிஸர் என 31 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் திலக் வர்மாவுடன் ஜோடி சேர்ந்த ஆயூஷ் பதோனி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திட பதோனி அரைசதம் கடந்து அசத்த, இந்திய அணியின் வெற்றியும் எளிதானது. அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்தந் நிலையில் ஆயுஷ் பதோனி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நெஹால் வதேராவும் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 35 ரன்களையும், ரமந்தீப் சிங் 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய ஏ அணி 15.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் ஓமன் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை