இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி கே.எல்.ராகுலின் அதிரடியான ஆட்டத்தினால் 364 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து நேற்றைய தினம் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்தது. அதன்பின் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோவ் இணை களமிறங்கியது.
இதில் ஜோ ரூட் அரைசதம் கடக்க, மறுமுனையிலிருந்து பேர்ஸ்டோவ்வும் அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களைச் சேர்த்தது.
இதில் ஜோ ரூட் 89 ரன்களுடனும், ஜானி பேர்ஸ்டோவ் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.