இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் சா்மா மட்டுமே அதிகபட்சமாக 19 ரன்களை சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் ஆண்டா்சன், ஓவா்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ராபின்சன், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

Advertisement

தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 129 ஓவா்களில் 423/8 ரன்களை எடுத்திருந்தது. ஓவா்டன் 24 ரன்களுடனும் ராபின்சன் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனா். இதில் அதிகபட்சமாக கேப்டன் ரூட், 165 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து அசத்தினார். 

இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இந்த டெஸ்டில் தோல்வியடைவதிலிருந்து தப்பிக்க இந்திய அணி கடுமையாகப் போராட வேண்டிய நிலையில் உள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முகமது ஷமி, “ஆடுகளம் மெதுவாக உள்ளதால் பந்து சீம் மற்றும் ஸ்விங் ஆவதை நிறுத்திவிடுகிறது. அதுபோன்ற சூழலில் பந்தை ஒரே இடத்தில் வீசவேண்டும். இப்போது பேட்டிங் செய்வது சுலபமாக உள்ளது. ஆடுகளம் இதுபோல இல்லாமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். எங்களுடைய பேட்ஸ்மேன்களும் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து விட்டார்கள். நீண்ட நாள் கழித்து இதுபோல ஆகியுள்ளது. 2ஆவது இன்னிங்ஸில் நீண்ட நேரம் ஆடுவதைப் பற்றி யோசிக்க வேண்டும். 

2ஆவது டெஸ்டில் உள்ள தற்போதைய நிலைமை எங்களைப் பாதிக்கவில்லை. நாங்கள் மூன்று, இரண்டு நாள்களில் ஆட்டத்தை முடித்துள்ளோம். அதனால் எங்களுக்கும் ஒரு மோசமான நாள் அமையலாம். குறைந்த ரன்களில் ஆட்டமிழக்கலாம். சிலசமயங்களில் இதுபோல நடைபெறும். அதனால் மனஉறுதியை இழப்பதில் அர்த்தமில்லை. இன்னும் இரு டெஸ்டுகள் மீதமுள்ளன. இப்போது நாங்கள் 1-0 என முன்னிலையில் உள்ளோம். எங்களுடைய திறமை மீது நம்பிக்கை வைக்கவேண்டும். அதுதான் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News