ENG vs IND, 4th test: அரைசதமடித்த கோலி; மீண்டும் தடுமாற்றும் இந்தியா!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா -கேஎல் ராகுல் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 28 ரன்கள் சேர்த்த நிலையில் கிறிஸ் வோக்ஸின் சிறப்பான பந்தால் ரோஹித் சர்மா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ராகுலும் 17 ரன்களுக்கு ஒல்லி ராபின்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
கடந்த டெஸ்ட் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா இம்முறை 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரவீந்திர ஜடேஜா முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். ஆனால், இந்த மாற்றம் அணிக்குப் பலனளிக்கவில்லை. அவர் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால், இந்திய அணி 69 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ரஹானேவும் தொடக்கத்தில் சற்று தடுமாற கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து விளையாடி வந்த கோலி 85ஆவது பந்தில் அரைசதத்தை எட்டினார்.
அதன்பின் அரைசதம் கடந்த கையோடு விராட் கோலி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து துணை கேப்டன் ரஹானேவும் 14 ரன்களுக்கு கிரெய்க் ஓவர்டன் பந்தில் ஆட்டமிழந்தார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதனால் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த், ஷர்துல் தாக்கூர் தலா 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.