ENG vs IND, 2nd Test: போட்டியின் முடிவு குறித்து காத்திருக்கும் ரசிகர்கள்!

Updated: Mon, Aug 16 2021 12:32 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி என அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இந்தியா இழந்தபோதும் புஜாரா - ரஹானே 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.

புஜாரா தன்னுடைய வழக்கமான கிளாசிக் பேட்டிங்கால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதித்தார். அவரை ஆட்டமிழக்க எவ்வளவோ முயற்சித்தார் கேப்டன் ஜோ ரூட். ஆனால், அவர் நங்கூரம்போல் பேட்டில் நிலைத்து ஆடினார். இருப்பினும், புஜாரா 206 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்களை சேர்த்த நிலையில் மார்க்வுட் பந்துவீச்சில் அவர் அவுட்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து நான்காம் நாள் ஆட்ட நேரம் முடிய 14 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் மொயின் அலி சுழலில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 61 ரன்களில் வெளியேறினார் ரஹானே. இதனால் கடைசி நேரத்தில் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

இருப்பினும் களத்தில் ரிஷப் பண்ட் (14) மற்றும் இஷாந்த் ஷர்மா (4) விளையாடி வருகின்றனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்களை எடுத்துள்ளது. 

இதையடுத்து இன்று கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி இன்னும் 50 ரன்கள் வரை அடிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு 200 ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடியும். அது இந்திய அணிக்கும் நெருக்கடி இல்லாமல் இருக்கும். இருப்பினும் இப்போட்டி முடிவை எட்டுமா அல்லது டிராவில் முடியுமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இன்றைய ஆட்டத்தை நோக்கி காத்திருக்கின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை