இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி செஸ்டர் லி ஸ்டிரிட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் நிசான்கா, அஸலங்கா, ஷானகா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் குசால் பெரேரா - வானிந்து ஹசரங்கா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதமடித்தும் அசத்தினர்.
பின் 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குசால் பெரேரா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 54 ரன்களில் ஹசரங்காவும் பெவிலியனுக்குத் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து இங்கிலாந்து பந்துவீச்சில் நடையைக் கட்டினர்.
இதனால் 42.3 ஓவர்களிலேயே இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்த் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யவுள்ளது.