ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து!

Updated: Sat, Nov 11 2023 23:00 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளையுடன் முடிவடைகின்றன. இதில் இன்று நடைபெற்ற 44ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் டேவிட் மாலன் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 59 ரன்களில் ஜானி பேர்ஸ்டோவும் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - பென் ஸ்டோக்ஸ் கூட்டணியும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 84 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து 60 ரன்களுக்கு ஜோ ரூட்டும் ஆட்டமிழந்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாரி ப்ரூக் 30 ரன்களையும், கேப்டன் ஜோஸ் படர் 27 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களைச் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகளையும், ஷாஹின் அஃப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபிக், ஃபகர் ஸமான் ஆகியோர் அடுத்தடுத்து டேவிட் வில்லி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இணைந்த கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

அதன்பின் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இருவரில் பாபர் ஆசாம் 38 ரன்களுக்கும், முகமது ரிஸ்வான் 36 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதையடுத்து களமிறங்கிய சௌத் சகீலும் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஆகா சல்மான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். 

அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய இஃப்திகார் அஹ்மத், ஷதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக களமிறங்கிய ஹாரிஸ் ராவுஃப் 3 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 35 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித், கஸ் அட்கின்சன், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தகுதியையும் பெற்று அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை