இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி டவுன்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 22 ரன்களில் மந்தனா ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 44 ரன்களில் ஆட்டாமிழந்து ஏமாற்றமளித்தார்.
அவர்களைத் தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி தடுமாறியது. ஆனால் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் மிதாலி ராஜ் அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், அரைசதம் கடந்தும் அசத்தினார்.
இதன்மூலம் மிதாலி ராஜ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 57 ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக மிதாலி ராஜ் 59 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கேட் கிராஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.