ENGW vs PAKW, 2nd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தான் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது லீக் போட்டி நார்த்தாம்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டேனியல் வையட் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த மையா பௌச்சர் - ஆலிஸ் கேப்ஸி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் பௌச்சர் 30 ரன்களிலும், அலிஸ் கேப்ஸி 31 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நாட் ஸ்கைவர் அதிரடியாக விளையாடி 31 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் சீரான இடைவேளையில் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நிதா தார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் குல் ஃபெரேசா 3 ரன்களுக்கும், சித்ரா அமீன் 11 ரன்களுக்கும், சதஃப் ஷமாஸ் ரன்கள் ஏதுமின்றியும், முனீபா அலி 18 ரன்களுக்கும், கேப்டன் நிதா தர் ஒரு ரன்னிலும், அலியா ரியாஸ் 19 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் பாகிஸ்தான் மகளிர் அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 79 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், லௌரன் பெல், சாரா கிளென், அலிஸ் கேப்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது.