நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் - ரோஹித் சர்மா!

Updated: Thu, Aug 10 2023 22:21 IST
Image Source: Google

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் கிரிக்கெட் அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் பும்ரா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் காயத்திலிருந்து இன்னும் குணமடையாமல் இருப்பது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வரும் நிலையில் மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் இல்லாததும் முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றதே கிடையாது. உலகக் கோப்பையை வெல்வது என்பது மிகப் பெரிய கனவு. உலகக் கோப்பையை வெல்வதைக் காட்டிலும் வேறு விஷயங்கள் எதுவும் எனக்கு அதைவிட மகிழ்ச்சியை தரப் போவதில்லை. உலகக் கோப்பையை நீங்கள் எளிதில் வென்றுவிட முடியாது. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். 

நாங்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். அணியில் உள்ள அனைவரும் உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். ஏனென்றால், எங்களிடம் சிறந்த அணி இருக்கிறது. நாங்கள் அனைவரும் சிறந்த வீரர்கள். எங்களிடம் உள்ள நம்பிக்கை மற்றும் உறுதி எங்களால் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற ஊக்கத்தை கொடுக்கிறது. உலகக் கோப்பையை வெல்லவில்லை என்றால் அதனை நாங்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்தபோது, நாங்கள் உலகக் கோப்பைக்காக தொடர்ந்து போராடுவோம் என்று கூறினேன். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வந்தது. நாங்கள் தொடர்ந்து உலகக் கோப்பைக்காக போராடி வருகிறோம். ஒரு கட்டத்தில் நாங்கள் கண்டிப்பாக உலகக் கோப்பையை வெல்வோம். நான் ஒரு பேட்ஸ்மேனாக முதலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். கேப்டன்ஸி என்பது இரண்டாவது பட்சமே. கேப்டன் பொறுப்பு என்பது மிக முக்கியமானது என்பதை நான் மறுக்க முடியாது. அதே நேரத்தில் தொடக்க ஆட்டக்காரராக அணிக்குத் தேவையான ரன்களை நான் சேர்க்க வேண்டும்.

வீரர்களுக்கு காயம் ஏற்படுவது எங்களுக்கு அச்சத்தை கொடுக்கிறது. அதனால் வீரர்களுக்கு ஓய்வளிப்பது முக்கியம். இந்த காரணத்தினால் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக சில வீரர்கள் ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை. அதேபோல இந்த ஆண்டு ஒருநாள்உலகக் கோப்பைக்கு முன்னதாக நான் உள்பட சில வீரர்களுக்கு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை