முகத்தில் பந்து தாக்கி படுகாயமடைந்த ரச்சின் ரவீந்திரா; ரசிகர்கள் அதிர்ச்சி - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாக்கூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் கேன் வில்லியம்சன் 58 ரன்களையும், டேரில் மிட்செல் 81 ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடிய கிளென் பிலீப்ஸ் சதமடித்து அசத்தியதுடன் 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைச் சேர்த்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், அப்ரார் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய காம்ரன் குலாம், முகமது ரிஸ்வான் ஆகியோரும் சோபிக்க தவறினர். அதேசயம் தொடக்க வீரராக களமிறங்கிய ஃபகர் ஸமான் அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அரைசதம் கடந்ததுடன் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 84 ரன்களைச் சேர்த்தார்.
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீரர்களில் சல்மான் ஆகா 40 ரன்களையும், தயாப் தாஹிர் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் 47.5 ஓவரில் 252 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, மிட்செல் சான்டனர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திர காயமடைந்து களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இன்னிங்ஸின் 38ஆவது ஓவரை மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய நிலையில், அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட குஷ்தில் ஷா அதனை டிப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்தார். ஆனால் பந்தில் அவர் எதிர்பார்த்த அளவு வேக இல்லாததால் கேட்ச்சிற்கு சென்றது.
அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா கேட்ச் பிடிப்பதற்காக தயாராக இருந்த நிலையில் கடைசி நொடியில் பந்தை தவறவிட்டார். இதனால் அந்த பந்து நேரடியாக அவரின் முகத்தை தக்கியது. இதனால் நிலைகுலைந்த ரச்சின் ரவீந்திரா சுருண்டு விழுந்தார். அதன்பின் அவருது முகத்தில் இருந்து ரத்தம் கொட்ட தொடங்கியதை அடுத்து அணி மருத்துவர்கள் உடனடியாக களத்திற்கு வந்தனர்.
அதன்பின் ரச்சின் ரவீந்திராவுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையிலும், அவர் களத்தில் இருந்து வெளியேறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பயம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேற்கொண்டு அவரின் காயம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாததால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
ஏற்கெனவே நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் காயமடைந்துள்ள நிலையில், தற்போது ரச்சின் ரவீந்திராவும் காயமடைந்திருப்பது நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் கூடிய விரைவில் காயத்தில் இருந்து குணமடைய வேண்டும் என்ற ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரச்சின் ரவீந்திரா காயமடைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.