ரிஷப் பந்த் பேட்டிங் அணுகுமுறையை விமர்சித்த வீரேந்திர சேவாக்!

Updated: Thu, Apr 04 2024 20:53 IST
ரிஷப் பந்த் பேட்டிங் அணுகுமுறையை விமர்சித்த வீரேந்திர சேவாக்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 18 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் பவுண்டரி மழை பொழிந்த சுனில் நரைன் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

அதன்பின் 7 பவுண்டரி, 7 சிக்சர்கள் 84 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் விக்கெட்டை இழக்க, 54 ரன்களில் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய் ஆண்ட்ரே ரஸல் 41 ரன்களையும், ரிங்கு சிங் 26 ரன்களையும் சேர்த்ததன் மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களைச் சேர்த்து, ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த இரண்டாவது அணி எனும் சாதனையை படைத்தது.

இதையடுத்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரிஷப் பந்த் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அரைசதம் கடந்த நிலையிலும், மற்ற பேட்டர்கள் சொதப்பியதன் காரணமாக அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இருப்பினும் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் என 28 ரன்களைச் சேர்த்து அசத்திருந்தார். அவர் களத்தில் இருக்கும் வரை டெல்லி அணியால் வெற்றியை பெறமுடியும் என்ற எண்ணமும் ரசிகர்கள் மத்தில் இருந்தது.

இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழந்ததற்கு பதிலாக சதமடித்திருக்கலாம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்தின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இத்தொடரில் அவர் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் பெரிதளவில் சோபிக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

இருப்பினும் நேற்றைய போட்டியில் அவர் அதிரடியாக விளையாடி தனது விக்கெட்டை பரிசளித்துவிட்டதாகவே நான் பார்க்கிறேன். ஏனெனில் எதிரணி நிர்ணயித்த இமாலய இலக்கை நோக்கி விளையாடும் நீங்கள், வெற்றிபெற முடியாது என தெரிந்தும் ஏன் உங்களது விக்கெட்டை இழந்தீர்கள் என்பது புரியவில்லை. ஏனெனில் நீங்கள் களத்தில் கூடுதலாக 20 பந்துகளை எதிர்கொண்டு, உங்களது சதத்தை பதிவுசெய்திருக்க வேண்டும்.

ஏனெனில் இப்போட்டியில் நீங்கள் முடிந்தவரை விக்கெட்டை இழக்காமல் சதமடித்திருந்தால் உங்களது ரன் ரேட்டிற்கு அது மிகப்பெரும் உதவியாக அமைந்திருக்கும். அதேபோல் நீங்கள் ஆட்டமிழக்காமல் விளையாடி அடுத்த போட்டிக்கான பயிற்சியையும் இப்போட்டியில் எடுத்திருக்கலாம். அப்படி நீங்கள் செய்திருந்தால் அடுத்த போட்டியில் நீங்கள் வலைப்பயிற்சியை தவிர்த்து விட்டு நேரடியாக களமிறங்கி இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை