சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த கம்பீர்!

Updated: Tue, May 30 2023 15:09 IST
Gautam Gambhir Hailed Chennai Super Kings For Their Memorable Win In IPL 2023 (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் சாம்பியன் தீர்மானிக்கும் இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. குஜராத்தின் அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜாராத் அணிக்கு சாய் சுதர்சன் 96 ரன்களும், விர்திமான் சஹா 54 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 214 ரன்கள் குவித்தது. இதன்பின் மழை குறுக்கிட்டு போட்டியை இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தாமதப்படுத்தியதால், சென்னை அணிக்கு வெற்றி இலக்கு 171ஆக குறைக்கப்பட்டு, போட்டியின் ஓவரும் 15ஆக குறைக்கப்பட்டது.

இதனையடுத்து 90 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு கான்வே 47 ரன்களும், கெய்க்வாட் 26 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய ரஹானே (27), ராயூடு (19) என ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததாலும், குஜராத் வீரர்களும் விட்டுகொடுக்காமல் கடுமையாக போராடியதாலும் சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை சென்னை அணி சந்தித்தது.

மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரின் முதல் நான்கு பந்திலும் துபே மற்றும் ஜடேஜா பெரிதாக ரன் குவிக்க முடியாததால், கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவை என்ற நிலை சென்னை அணிக்கு ஏற்பட்டது. கடைசி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட ஜடேஜா, ஐந்தாவது பந்தில் ஒரு சிக்ஸரும், கடைசி பந்தில் ஒரு பவுண்டரியும் அடித்து சென்னை அணிக்கு மிரட்டல் வெற்றியை பெற்று கொடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த தரமான வெற்றி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளதால் முன்னாள் வீரர்கள் பலர் சென்னை அணிக்கான தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, சென்னை அணியின் இந்த வெற்றி குறித்தான தங்களது கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீரும், சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில், “சென்னை அணிக்கு எனது வாழ்த்துக்கள். ஒரு முறை கோப்பையை வெல்வதே கடினம், 5 முறை வெல்வது எல்லாம் பெரிய ஆச்சரியம்” என்று பதிவிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை