தன்னை ஃபிக்ஸர் என திட்டினார் - கம்பிருடனான மோதல் குறித்து ஸ்ரீசாந்த்!

Updated: Thu, Dec 07 2023 14:49 IST
தன்னை ஃபிக்ஸர் என திட்டினார் - கம்பிருடனான மோதல் குறித்து ஸ்ரீசாந்த்! (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று சூரத் நகரில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பார்த்திவ் படேல் தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை தோற்கடித்த கௌதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் ஸ்ரீசாந்த் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அதாவது அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தன்னுடைய அணிக்கு கேப்டனாக களமிறங்கிய கம்பீர் ஆரம்பத்திலேயே ஸ்ரீசாந்த் வீசிய சில பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்தார்.

அப்போது பெரும்பாலான பவுலர்களைப் போலவே வெறுப்பான ஸ்ரீசாந்த் அவரை பார்த்து முறைத்ததாக தெரிகிறது. மறுபுறம் கௌதம் கம்பீர் தம்மை முறைத்த ஸ்ரீசாந்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து நடுவர்களும் சக வீரர்களும் உள்ளே புகுந்து சமாதானம் செய்தார்கள். இதனால் ஏமாற்றமடைந்த ஸ்ரீசாந்த் களத்தில் சொல்லக்கூடாத வார்த்தைகளால் தம்மை கௌதம் கம்பீர் திட்டியதாக போட்டியின் முடிவில் கூறினார். 

அத்துடன் இப்படி சக வீரர்களிடம் சண்டையில் ஈடுபடுவதாலேயே வீரேந்திர சேவாக், விராட் கோலி போன்ற சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட கௌதம் கம்பீரை விரும்புவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் களத்தில் கம்பீர் என்ன சொல்லி திட்டினார் என்பதை பின்னர் தெரிந்து கொள்வீர்கள் என்றும் ஸ்ரீசாந்த் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் 2013 ஐபிஎல் தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கியதை வைத்து “நீ ஃபிக்ஸர்” என்று கௌதம் கம்பீர் களத்தில் தம்மை திட்டியதாக ஸ்ரீசாந்த் தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் கூறியுள்ளார். குறிப்பாக நீதிமன்றம் சென்று தன் மீது தவறு இல்லை என்று நிரூபித்த பின்பும் அவர் இவ்வாறு சொன்னது வேதனையை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை