ஐபிஎல் 2022: மோசமான சாதனையை நிகழ்த்திய கிளென் மேக்ஸ்வெல்!

Updated: Wed, Apr 27 2022 15:42 IST
Image Source: Google

மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் நேற்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் பெங்களூருவை தோற்கடித்த ராஜஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியை பதிவு செய்தது புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. 

புனே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் போராடி 144/8 ரன்களை எடுத்தது. அந்த அணிக்கு ஜோஸ் பட்லர் 8 (9) தேவ்தூத் படிக்கள் 7 (7) போன்ற நம்பிக்கை நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் கடைசி நேரத்தில் அதிரடியாக தனி ஒருவனை போல் போராடிய இளம் வீரர் ரியான் பராக் 3 பவுண்டரி 4 சிக்சர்கள் உட்பட 56* (31) ரன்கள் எடுத்து காப்பாற்றினார்.

இதையடுத்து ராஜஸ்தானின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு வெறும் 115 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது. இதனால் பங்கேற்ற 9 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்த அந்த அணி 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட போதிலும் பேட்டிங்கில் சொதப்பி எளிய இலக்கை எட்டிப் பிடிக்க முடியாமல் பெங்களூரு தோல்வியடைந்தது அந்த ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. குறிப்பாக ஏற்கனவே விராட் கோலி பார்ம் அவுட் என தெரிந்தும் கேப்டன் டு பிளேஸிஸ் அவுட்டானதும் பொறுப்பை காட்டாத முக்கிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் காரணமாகவே அதிலிருந்து மீள முடியாத அந்த அணி கடைசி வரை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோற்றது.

தனது திருமணத்தையொட்டி இந்த வருடம் ஐபிஎல் தொடரின் முதல் ஒரு சில போட்டிகளில் பங்கேற்காத அவர் அதன்பின் 8* (2), 26 (11), 55 (34), 23 (11), 12 (11), 0 (1) என ஒரு போட்டியை தவிர எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்களை எடுக்காதது மிடில் ஆர்டரில் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் 13 போட்டிகளில் 1 சிக்சர் கூட அடிக்காமல் வெறும் 108 ரன்களை எடுத்ததால் அடுத்த வருடமே அந்த அணி நிர்வாகம் கழற்றி விட்டது.

இருப்பினும் அவரை நம்பிய பெங்களூர் அணி நிர்வாகம் கடந்த வருடம் 14.25 கோடி என்று மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய நிலையில் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்ட அவர் கடந்த வருடம் 15 போட்டிகளில் 6 அரை சதங்கள் உட்பட 513 ரன்களையும் 3 விக்கெட்களையும் எடுத்து ஒரு சிறப்பான ஆல்ரவுண்டராக செயல்பட்டார். அதன் காரணமாக அந்த அணி எளிதாக பிளே-ஆப் சுற்றுக்கு சென்றதை அடுத்து மீண்டும் அவரை நம்பிய அந்த அணி நிர்வாகம் இந்த வருட ஐபிஎல் தொடருக்காக தக்க வைத்தது.

இருப்பினும் கடந்த வருடத்தை போல இந்த வருடம் இதுவரை அவர் பெரிய அளவில் ஜொலிக்காதது பெங்களூரு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. முன்னதாக இந்த போட்டியில் கோல்டன் டக் அவுட்டான அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோல்டன் டக் அவுட்டான வெளிநாட்டு வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். 

1. கிளென் மேக்ஸ்வெல் : 12*
2. ரசித் கான் : 11
3. சுனில் நரேன் : 10
4. ஏபி டீ வில்லியர்ஸ் : 10

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை