சிபிஎல் 2024: செயின்ட் லூசியா கிங்ஸை பந்தாடியது கயானா அமேசன் வாரியர்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, அதனைத்தொடர்ந்து களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டூ பிளெசிஸ் 6 ரன்களிலும், சார்லஸ் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய அகீம் அகஸ்டே 10 ரன்களுக்கும், பனுகா ராஜபக்ஷா 7 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் 2 ரன்களுக்கும், டிம் செய்ஃபெர்ட் 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மேத்யூ ஃபோர்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 31 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 14.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களை மட்டுமே எடுத்தது. வாரியர்ஸ் அணி தரப்பில் குடகேஷ் மோட்டி, கேப்டன் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய வாரியர்ஸ் அணிக்கு டிம் ராபின்சன் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். தொடந்து அதிரடியாக விளையாடிய டிம் ராபின்சன் 3 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 சிக்ஸர்களுடன் 47 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 11 ரன்களையும், அசாம் கான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிம்ரான் ஹெட்மையர் 8 ரன்களையும், கீமோ பால் ஒரு ரன்னையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 10 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அபரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய குடகேஷ் மோட்டி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.