முகமது ஷமிக்கு மாற்றாக தமிழக ரஞ்சி அணி வீரரை ஒப்பந்தம் செய்த குஜராத் டைட்டன்ஸ்!

Updated: Wed, Mar 20 2024 21:04 IST
முகமது ஷமிக்கு மாற்றாக தமிழக ரஞ்சி அணி வீரரை ஒப்பந்தம் செய்த குஜராத் டைட்டன்ஸ்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால், இத்தொடர் மீது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி, அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட தொடர்களையும் காயம் காரணமாக தவறவிட்டார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் விலகினார்.  இருப்பினும் அவர் ஐபிஎல் தொடருக்கு முன் முழு உடற்தகுதியை எட்டி கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள்  பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தனது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முகமது ஷமி இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சமீபத்தில் நாடு திரும்பினார். மேலும் அவரது காயம் குணமடைய கால அவகாசம் தேவைப்படும் என்பதால் அவர் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.

முகமது ஷமி குஜராத் டைட்டன்ஸ் அணியின் நடத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்ததுடன், இரு முறை அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவருக்கு மாற்று வீரராக தமிழ்நாடு ரஞ்சி அணிக்காக விளையாடிவரும் கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

அதன்படி இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியிலும், ஐபிஎல் தொடரில் 5 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள சந்தீப் வாரியரை ரூ.50 லட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ரஞ்சி கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை