எனது சிறப்பான பேட்டிங்கிற்கு இதுதான் முக்கிய காரணம் - ஜோஸ் பட்லர்!

Updated: Wed, Apr 17 2024 13:29 IST
எனது சிறப்பான பேட்டிங்கிற்கு இதுதான் முக்கிய காரணம் - ஜோஸ் பட்லர்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களைச் சேர்த்தது. இதில் அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் 30 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கியகேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்திருந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரைன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் 56 பந்துகளை சந்தித்த நரைன் 13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 109 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி க்ளமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ரியான் பாராக்கும் 34 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீராரான ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடியதுடன் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மேலும் இப்போட்டியில் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இப்போட்டி முடிவுக்கு பின் பேசிய ஜோஸ் பட்லர், “இன்றைய போட்டியில் நம்பிக்கை ஒன்று மட்டுமே எனது சிறப்பான பேட்டிங்கிற்கு முக்கிய காரணம். நான் கொஞ்சம் தடுமாறியது உண்மை தான். நாம் நினைத்ததை போன்று விளையாட முடியாமல் தடுமாறும் போது விரக்தி ஏற்படும், நம் மீதே நமக்கு சந்தேகம் ஏற்படும். ஆனால் நான் என்னிடம் எதுவும் இன்னும் முடியவில்லை, நம்பிக்கையுடன் இரு என கூறி கொண்டே இருந்தேன், இதன் மூலமே எனக்கு நம்பிக்கையும் கிடைத்தது.

தோனி, கோலியை போன்ற வீரர்கள் கடைசி வரை களத்தில் இருந்து போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்து வருவதை நாம் பல முறை பார்த்து வருகிறோம். நானும் இந்த போட்டியில் அதை தான் செய்தேன். எங்கள் பயிற்சியாளரான சங்ககாராவும் என்னிடம் நம்பிக்கையை பற்றி பேசி கொண்டே இருப்பார். நாம் நினைத்தது நடக்காத போது உடனே நம்பிக்கையை இழந்துவிட கூடாது என்று கூறுவார். 

போட்டி எப்போதும் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம், எனவே நாம் அதற்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும் என அவர் எப்போது உத்வேகமளிப்பார். கொல்கத்தா அணிக்கு எதிரான எனது இந்த இன்னிங்ஸ் ஐபிஎல் தொடரில் எனது சிறந்த இன்னிங்ஸ் என்று கூட கூறலாம். ஏனெனில் நீங்கள் மிகப்பெரும் இலக்கை எட்டும் போது குறிப்பாக கடைசி பந்தில் நீங்கள் ஆட்டமிழக்காமல் இலக்கை எட்டும் போது அது உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும் ” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை