உலகக்கோப்பை வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த ஹாரிஸ் ராவூஃப்!

Updated: Sat, Nov 11 2023 19:54 IST
உலகக்கோப்பை வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த ஹாரிஸ் ராவூஃப்! (Image Source: Google)

உலகக்கோப்பை தொடரில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 44ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ததாக அறிவித்ததால் பாகிஸ்தான் சீக்கிரமாக அந்த அணியை ஆல் அவுட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

இந்நிலைமையில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 82 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் மாலன் 31 ரன்களில் அவுட்டாக மறுபுறம் தன்னுடைய பங்கிற்கு சிறப்பாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் 3வது விக்கெட்டுக்கு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.

அதில் குறைந்த ரன்களில் இருந்த போதே கொடுத்த எளிதான கேட்ச்சை தவற விட்ட ஷாஹீன் அஃப்ரிடி ஒரு வழியாக 84 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸை கிளீன் போல்ட்டாக்கி மறுபுறம் சவாலை கொடுத்த ஜோ ரூட்டையும் 60 ரன்களில் அவுட்டாக்கினார். அந்த நிலைமையில் வந்த ஹரி ப்ரூக் 46ஆவது ஓவரில் ஹரிஷ் ரஃவூபை 6, 2, 4, 1, 1, 6 என அதிரடியாக எதிர்கொண்டு 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவர்களிலேயே கேப்டன் ஜோஸ் பட்லரும் 27 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் இங்கிலாந்து 300 ரன்கள் கடந்து அசத்தியது. இறுதியில் 50 ஓவர்களில் இங்கிலாந்து 337/9 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூஃப் 3, ஷாஹீன் அப்ரிடி மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

இதனால் அரையிறுதிக்கு செல்வதற்கு இப்போட்டியில் இங்கிலாந்தை 50 முதல் 100 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் கொஞ்சமும் பொறுப்பின்றி கேட்ச்களையும் நிறைய பவுண்டரிகளையும் விட்டு சுமாராக ஃபீல்டிங் செய்தது. அதனால் 338 ரன்கள் இலக்கை 6.2 ஓவரில் சேசிங் செய்தால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான் வீட்டுக்கு கிளம்ப தயாராகியுள்ளது.

அதை விட இப்போட்டியில் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை எடுத்த போதிலும் 64 ரன்களை வாரி வழங்கிய ஹாரிஸ் ரவூஃப் இந்த உலகக் கோப்பையில் ஆரம்பம் முதலே சுமாராக செயல்பட்டு மொத்தம் 9 போட்டிகளில் 533 ரன்கள் கொடுத்துள்ளார். இதன் மூலம் 48 வருட உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் வாரி வழங்கிய பவுலர் என்ற மோசமான உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் ஆதில் ரஷித் 11 போட்டிகளில் 526 ரன்கள் கொடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை