IND vs SA: ரிஷப் பந்திற்கு அறிவுரை வழங்கிய கவாஸ்கர்!

Updated: Sat, Jun 18 2022 22:41 IST
'He Hasn't Learned': Gavaskar Slams Pant For Repeating Same Mistake Again (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற 4 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று தொடரை சமன் செய்துள்ளன.

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி நாளை பெங்களூருவிலுள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்கிடையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் 29, 5, 6, 17 என குறைவான ரன்களே எடுத்துள்ளார் இந்திய அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த். இதுவரை 47 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள பந்த், 3 அரை சதங்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 123.95. 

இந்தத் தொடரில் வைட் ஆஃப் ஸ்டம்ப் பக்கம் பந்துவீசும்போது அதை அடித்தாட முயன்று ஆட்டமிழந்துள்ளார். நான்கு முறையும் இதேபோல ஆட்டமிழந்த ரிஷப் பந்துக்கு முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சுநீல் கவாஸ்கர் சில அறிவுரைகளை வர்ணனையின்போது கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ரிஷப் பந்த் தனது தவறுகளில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. வைடாகப் பந்து வீசினால் ஒவ்வொரு முறையும் அதை அடித்தாட முயல்கிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசினால் சிக்ஸர் அடிக்க முயலும் ஷாட்டை அவர் விளையாடக் கூடாது. அந்த ஷாட்டால் அவர் நினைத்தபடி ரன்கள் எடுக்க வழியில்லை. 

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசினால் ஆட்டமிழந்து விடுவார் எனச் சரியாகத் திட்டமிட்டுத்தான் பந்துவீசுகிறார்கள். இந்த வருடம் இதுபோல 10 முறை ஆட்டமிழந்துள்ளார். ரிஷப் பந்த் அந்த ஷாட்டை முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் சில பந்துகள் வைட் ஆகியிருக்கும். இந்திய அணியின் கேப்டனாக இருந்து, ஒரே தொடரில் ஒரே மாதிரியான ஷாட்டில் தொடர்ந்து ஆட்டமிழப்பது நல்லதல்ல” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை