விராட் கோலியை நெகிழவைத்த ஹாங்காங் வீரர்கள்!

Updated: Thu, Sep 01 2022 14:14 IST
Hong Kong players gift Virat Kohli team jersey with a heartfelt message (Image Source: Twitter)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 

ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ஹாங்காங் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 192 ரன்களை குவித்தது.

193 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 152 ரன்கள் மட்டுமே அடித்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தார். விராட் கோலி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் இருந்துவந்தது இந்திய அணிக்கு கவலையாக இருந்தது மட்டுமல்லாது, கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

இந்நிலையில், ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். 44 பந்தில் 59 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்றார். விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் இந்திய அணிக்கு நம்பிக்கையளித்தது.

சூர்யகுமார் யாதவின் காட்டடி அரைசதம் தான் (26 பந்தில் 68 ரன்கள்) இந்திய அணி 192 ரன்களை குவிக்க காரணம். ஆனால் அதேவேளையில், மறுமுனையில் விராட் கோலி நின்றதால் தான் சூர்யகுமார் யாதவால் அதிரடியாக ஆடமுடிந்தது.

 

இந்நிலையில், இந்தியா - ஹாங்காங் இடையேயான போட்டி முடிந்தபின்னர், ஹாங்காங் வீரர்கள் ஹாங்காங் அணி ஜெர்சியை விராட் கோலிக்கு நினைவுப்பரிசாக வழங்கி நெகிழவைத்தனர். அந்த ஜெர்சியில், ஒரு தலைமுறைக்கே முன்னோடியாக திகழ்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள் என்றும் துணைநிற்போம். இனிவரும் காலத்தில் பெரிய சாதனைகள் உங்களுக்கு காத்திருக்கிறது என்று எழுதி அவரை நெகிழவைத்தனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை