சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூழ்நிலை வித்தியாசமானது - தீபக் சஹார்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து, ஹர்திக் பாண்டிய தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூழ்நிலை வித்தியாசமானது. அனைத்துமே உங்கள் தேர்வுதான். நீங்கள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று உங்களிடம் வந்து யாரும் கூறமாட்டார்கள்.
நீங்கள் தொழில்முறை வீரர். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு தேவையென்றால் நீங்கள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கலாம், அல்லது நாளை பங்கேற்கலாம், அல்லது பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காமலும் இருக்கலாம். நீங்கள் ஓய்வு எடுக்க விரும்பினால் அதற்கும் தடையில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உறுதி, ஆட்டக்களத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.
நாங்கள் போட்டியில் தோல்வியடைந்தாலும் நீங்கள் தான் காரணம் என்று யாரும் உங்களை நோக்கி கூறமாட்டார்கள். தோனியும் எதுவும் கூறமாட்டார். கடந்த முறை ஒரு சீசனில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் அணி சூழ்நிலை சிறப்பாக தான் இருந்தது. யாரிடமிருந்தும் எந்த அழுத்தமும் வராது. மற்றொரு காரணம் தோனி. நான் முதலில் சென்னை அணிக்கு வந்தபோது எப்போதும் அணியில் உள்ள ஜூனியர் வீரர்களுடன் இருந்து தோனி உணவு சாப்பிடுவதை நான் கவனித்தேன். அவர் ஏதேனும் சரி என்று நினைத்தால் அதில் உறுதியாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.