வீரர்கள் தங்கள் இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் - ரோவ்மன் பாவெல்!
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தம்புளாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி கமிந்து மெண்டிஸ் மற்றும் கேப்டன் சரித் அசலங்கா ஆகியோரது அபாராமான ஆட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சரித் அசலங்கா 59 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 51 ரன்னையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங், எவின் லூயிஸ் இணை தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன், முதல் விக்கெட்டுக்கு 109 ரன்களைச் சேர்த்தனர். இதில் இவரும் தங்களது அரைசதங்களையும் கடந்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த எவின் லூயிஸ் 50 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து ஷாய் ஹோப் 9 ரன்களில் நடையைக் கட்ட, பிராண்டன் கிங் 63 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 19 ரன்னிலும், ரோவ்மன் பாவெல் 13 ரன்னிலும் என ஆட்டமிழந்தாலும், இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 19.1 ஓவரில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பிராண்டன் கிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய விண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல், “இலங்கையில் நீங்கள் விளையாடும் போது முன்கூட்டியே முன்னிலை பெறுவது முக்கியம். அவர்கள் உள்நாட்டில் ஒரு சிறந்த அணி. அதனால் டாஸ் எப்போதும் முக்கியமானதாக இருக்கும். நீங்கள் முடிந்தவரை மேலே இருக்க வேண்டும்.நான் தனிப்பட்ட ஆட்டத்தில் நம்பிக்கை கொண்ட கேப்டன்.
Also Read: Funding To Save Test Cricket
அணியில் உள்ள மற்ற வீரர்கள் தங்களின் ஆட்டத்தை மெம்படுத்துவதில் சக வீரர்களுக்கும் உதவி வருகின்றனர். வீரர்கள் தங்கள் இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அது எங்கள் அணி வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை வழங்கியதுடன், எங்கள் அணிக்கு சிறப்பான வெற்றிகளைப் பெற்றுத்தர வழிவகை செய்து தந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.