நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவேன் - ரியான் பராக்!

Updated: Thu, May 30 2024 14:00 IST
Image Source: Google

இந்தியவில் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் பல்வேறு இளம் வீரர்களை அடையாளம் காட்டியுள்ளது. அதில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ரியான் பராக். நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ரியான் பராக் 4 அரைசதங்களுடன் 573 ரன்களைச் சேர்த்து அசத்தினார். அதேசமயம் நடப்பு தொடரில் 500 ரன்கள் கடந்த சர்வதேச கிரிக்கெட்டர் அல்லாத வீரராகவும் சாதனை படைத்தார். 

இதன் காரணமாக இவருக்கு நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கருத்துகள் எழுந்து வந்தன. ஆனாலும் இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் இனி வரும் தொடர்களில் ரியான் பராக் இந்திய அணிக்காக தேர்வு செய்யபட அதிக வாய்ப்புள்ளதாகவே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் தான் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறித்து ரியான் பராக் சில கருத்துகளை தெரிவித்துள்ளர். 

இதுகுறித்து பேசிய ரியான் பராக், “எப்போதாவது, நிச்சயம் நீங்கள் என்னை இந்திய அணிக்கு தேர்வு செய்துதான் ஆக வேண்டும். இது எனது நம்பிக்கை. அதனால் நான் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவேன். ஆனால் அது எப்போது என்ற கவலை இல்லை. அடுத்த தொடரோ அல்லது 6 மாதங்களுக்கு அடுத்த தொடரோ இல்லை ஒரு வருடத்திற்கு பிறகே ஆனாலும் நான் இந்திய அணிக்கா விளையாட ஆர்வமாக உள்ளேன். நான் எப்போது விளையாட வேண்டும் என்று யோசிக்கவில்லை.

ஏனெனில் அது என்னுடைய வேலை இல்லை, தேர்வாளர்களின் வேலை. ஐபிஎல் தொடரில் கடந்த சில சீசன்கள் எனக்கு நன்றாக அமையவில்லை. அதிலும் சில சமயங்களில் நான் கடுமையான காலங்களையும் சந்தித்துள்ளேன். ஆனால் எனது அணி என் மீது நம்பிக்கை வைத்து என்னை தொடர்ந்து ஆதரித்தது. அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நான் இந்த சீசன் மூலம் பூர்த்தி செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். 

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் நான் எப்படி விளையாடினேன் என்று பார்த்தீர்கள். நான் எனக்கான பொறுப்பை உணர்ந்து, என் மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று என் மீதான சுமையை எடுத்துக்கொள்கிறேன், அதனால்தான் என்னால் முடிந்தவரை சிறப்பாக விளையாட முடிகிறது. 

இந்த வருடம் இதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதுமட்டுமின்றி எனக்குப் பிடித்த 4ஆவது இடத்தில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அதனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் எப்படி செயல்பட்டேனோ, அதைப் போன்றே ஐபிஎல் தொடரிலும் விளையாட முயற்சித்தேன். அது சரியாக வேலை செய்தது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை