டி20 உலகக்கோப்பை: பிசிசிஐக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கிய ஐசிசி!

Updated: Wed, Jun 02 2021 22:11 IST
Image Source: Google

நடப்பாண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கரோனா இரண்டாவது அலை தாக்கம் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்த போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இதில் பிசிசிஐ சார்பில் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி, வருங்கால போட்டி அட்டவணை, அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் டி20 உலக கோப்பை போட்டியை கரோனா அச்சத்துக்கு மத்தியில் இந்தியாவில் நடத்த முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்க வசதியாக ஒரு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஐ.சி.சி. ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. 

அதன்படி டி20 உலக கோப்பையை இந்தியாவில் நடத்தலாமா? அல்லது மாற்று நடவடிக்கை மேற்கொள்ளலாமா? என்பது குறித்து தீர்மானிக்க வருகிற 28 ஆம் தேதி வரை பிசிசிஐக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள் பிசிசிஐ தெரிவிக்கும் திட்டத்தின்படி 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஐசிசி தனது இறுதி முடிவை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை