ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸி இமாலய வெற்றி!

Updated: Wed, Oct 25 2023 20:39 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸி இமாலய வெற்றி! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டிவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 24அவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட முயன்ற மிட்செல் மார்ஷ் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் டேவிட் வார்னருடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 71 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். பின் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என லபுஷாக்னேவும் தனது விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 22ஆவது சதத்தைப் பதிவுசெய்த நிலையில், 11 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 104 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் க்ரீன் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையை கட்டினர். 

ஆனால் அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.  அதன்பின்னும் அதிரடியை நிறுத்ததாத கிளென் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக குறைந்த பந்தில் சதமடித்த வீரர் எனும் ஐடன் மார்க்ரமின் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் முறியடித்து அசத்தினார். 

அதன்பின் 44 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 106 ரன்கள் எடுத்திருந்த கிளென் மேக்ஸ்வெல் தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களைக் குவித்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளையும், பாஸ் டி லீட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேக்ஸ் ஓடவுட் 6 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய விக்ரம்ஜித் சிங்கும் 6 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

அதன்பின் களமிறங்கிய காலின் அக்கர்மேன் 10, ஏங்கல்பிரெக்ட் 11, பாஸ் டி லீட் 4, தேஜா நிடமனுரு 14, லோகன் வான் பீக், வேண்டர் மெர்வ் ரன்கள் ஏதுமின்றியும், ஆர்யன் தத் ஒரு ரன்னிற்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 3 ஓவர்களை மட்டுமே வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதனால் நெதர்லாந்து அணி 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் ஆல் அவுட்டானது. இதன்முலம் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. மேலும் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அணி எனும் தனித்துவ சாதனையையும் ஆஸ்திரேலியா இன்று படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை