ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை 156 ரன்களில் சுருட்டியது இலங்கை!

Updated: Thu, Oct 26 2023 16:58 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை 156 ரன்களில் சுருட்டியது இலங்கை! (Image Source: Google)

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. 

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக வந்த ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அவர்களது அதிரடி நீண்ட நேர நீடிக்கவில்லை. இதில் டேவிட் மாலன் 28 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

அதனைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோவும் 30 ரன்கள் எடுத்து ஆட்டாமிழந்தார். அதன்பின் அனுபவ வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மோயீன் அலி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதுவரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆதில் ரஷிதும் 2 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்பின் அதிரடியாக விளையாடிய மார்க் வுட்டும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதனால் இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளையும், ஏஞ்சலோ மேத்யூஸ், கசுன் ரஜிதா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை