இந்த முடிவை எடுத்தால் உடனடியாக ஓய்வை அறிவிப்பேன் - உஸ்மான் கவாஜா!

Updated: Fri, Jan 05 2024 14:14 IST
இந்த முடிவை எடுத்தால் உடனடியாக ஓய்வை அறிவிப்பேன் - உஸ்மான் கவாஜா! (Image Source: Google)

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை வார்னர் – கவாஜா கூட்டணி தொடங்கியது. இதில் வார்னர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் கவாஜா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் பேட்டிங் செய்து ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 116 ரன்களாக இருந்தது. அப்போது திடீரென மழை பெய்ய, பின்னர் மழை நின்ற போதும் போதிய வெளிச்சம் இல்லாததால் இரண்டாம் நாள் ஆட்டம் சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே முடிவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே டெஸ்ட் போட்டியின் போது போதிய வெளிச்சம் இல்லாத நேரங்களில் பிங்க் பாலை பயன்படுத்தலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆலோசனை கூறினார். இதன் மூலமாக டெஸ்ட் போட்டிகளை டிராவாகாமல் தடுக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா, “ஒரு வேளை சிவப்பு பாலுக்கு பதில் பிங்க் பயன்படுத்த முடிவு செய்தால் உடனடியாக ஓய்வை அறிவிப்பேன். நான் வெள்ளை பந்து, சிவப்பு பந்து மற்றும் பிங் பந்தில் விளையாடி இருக்கிறேன். ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு மாதிரி செயல்படும். ஆனால் எந்த பந்தும் சிவப்பு பந்தை போல் இருக்காது. சிவப்பு பந்தில் விளையாடி தான் நாம் அனைவரும் வளர்ந்துள்ளோம். 

என்னை பொறுத்தவரை சிவப்பு பால் தான் டெஸ்ட் கிரிக்கெட். என்னதான் லைட்ஸ் கீழ் விளையாடினாலும், சூர்ய வெளிச்சத்தில் விளையாடுவதை போல் இருக்காது. இதனால் லைட் வெளிச்சத்தில் சிவப்பு பந்தை பார்ப்பதே எளிதாக இருக்காது. நிச்சயம் லைட் வெளிச்சத்தில் பிங்க் பந்தை நன்றாக பார்க்க முடியும். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் அந்த பிங்க் பந்துகள், சிவப்பு பந்தை போல் இருப்பதில்லை. 

100 ஆண்டுகளுக்கு மேலாகவும் டெஸ்ட் கிரிக்கெட் மாறவில்லை என்பது தான் அதன் அழகியல். ரசிகர்களின் ரசனை தான் மாறி இருக்கிறது. கொஞ்சம் பொறுமை இல்லாமல் இருக்கிறார்கள். சில நேரங்கள் வெளிச்சம் இல்லாத போது, மழை பெய்யும் போதும் விளையாட முடிவதில்லை. ஆனாலும் 5 நாட்கள் இருப்பதால், நிச்சயம் முடிவை எட்ட முடியும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை